Monday 4 August 2014

அஷ்ரப் அலி தானவி இறைநேசரா? – 1

இந்தியாவிலும் பிரிட்டிஷார் தங்கள் மோச, நாச வலையை விரித்தனர். இதில் அகப்பட்டுக் கொண்ட மௌல்விமார்கள், ஞானாசிரியர்கள்(?) ஏராளம். இவர்கள் அனைவரும் பிரிட்டிஷாருக்காக தூய இஸ்லாத்தை கூறு போட்டு விற்கத் துணிந்தனர். அதற்காக பிரிட்டிஷாரிடம் கூலியையும் பெற்றுக் கொண்டனர். இதற்காக ஒற்றுமையாக இருந்த முஸ்லிம்கள் மத்தியில் ஈமானின் அடிப்படையில் அதாவது நமது உயிரினும் மேலான நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது முஸ்லிம்கள் வைத்திருக்கும் கண்ணியத்தையும், மதிப்பு, மரியாதை, நேசத்தையும் குறைத்து எழுதியும், பேசியும் வந்தனர். இதனால் முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகள் ஏற்பட்டு சுதந்திர வேட்கையை ஊட்டிவந்த முஸ்லிம்கள் பின்தங்கினர். இதை சாக்காக வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர்.

இதன் பின்னணியில் இஸ்லாத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் யார்? அதற்காகத் துணை போனவர்கள் யார்? என்பதைப் பற்றி நமது முன்னோர்கள் நூல்கள் எழுதி வைத்துள்ளனர். அந்த நூல்களின் சாராம்சத்திலும்,
இந்நிலையில் இஸ்லாத்தின் சர்ச்சைக்குரிய ஒரு மனிதரைப் பற்றி முழு விபரமாக அறிய வேண்டியும் இந்த கட்டுரைப் படைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரையானது முழுக்க முழுக்க ஆதாரங்கள் அடிப்படையில் எழுதப்பட்டதேயன்றி வேறில்லை.

Ashraf Ali Thanvi

அந்த சர்ச்சைக்குரிய நபர் ஹகீமுல் உம்மத் என்று போற்றப்படும் மௌலானா அஷ்ரப் அலி தானவி தான். இவர் ஏன் சர்ச்சைக்குரியவரானார்? இவரின் கொள்கை, கோட்பாடுகள் என்ன? இவர்களை பின்பற்றும் கூட்டத்தார் கூறும் கூற்றுக்கள் இவருக்கு வலு சேர்க்கிறதா? இவர் கொண்ட கொள்கையினால் இவரை மகான் – வலி என்று சொல்லலாமா? போற்றலாமா? என்பது பற்றி இவர் எழுதிய நூற்களிலிருந்தும், இன்ன பிற பத்வாக்களிலிருந்தும், ஏனையோர் எழுதிய நூற்களிலிருந்தும் ஆதாரப்பூர்வமாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். நடுநிலையாளர்களே! இக்கட்டுரையை முழுக்க படித்து விட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் வடபகுதியில் இஸ்லாத்தில் சர்ச்சைக்குரியவர்களாக முஸ்லிம்களால் சித்தரிக்கப்பட்ட மௌல்விகள், போதனாசிரியர்களில் மௌலவி காஸிம் நானூத்தவி, கலீல் அஹ்மது அம்பேட்டவி, மௌல்வி இஸ்மாயில் தெஹ்லவி, மௌல்வி ரஷீத் அஹ்மது கங்கோஹி, மௌல்வி அஷ்ரப் அலி தானவி, குலாம் அஹ்மது காதியானி, மௌலானா அபுல் அஃலா மௌதூதி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்;. இஸ்லாமிய கருத்துக்களுக்கு மாற்றமாக எழுதியதால், பேசியதால், நடந்ததால் இவர்களின் ஈமானே சர்ச்சைக்குள்ளானது. இவர்களில் நாம் இப்போது பார்க்கப் போவது அஷ்ரப் அலி தானவி என்ற நபரைத்தான்.

யார் இந்த அஷ்ரப் அலி தானவி?

அஷ்ரப் அலி தானவி பற்றி மௌலவி ஹாபிஸ் எம்.எஸ் அப்துல்காதிர் பாக்கவி என்ற ஐனி ஷாஹ் (நூரி ஷாஹ்வுடைய கலீபா பைஜி ஷாஹ்வின் கலீபா) என்பவர் தம்முடைய 'தப்லீக்கும் அதன் தலைவர்களும்' என்ற நூலில் பக்கம் 10ல் மௌலவி அஷ்ரப் அலி தானவி மௌல்வி இல்யாஸின்(தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர்) மூன்றாவது குரு என்று கூறுகிறார்.

நூரி ஷாஹ்வின் பிரதான முரீதாகிய முஸ்லிம் குரல் ஆசிரியர் கனி சிஷ்தி தம்முடைய முஸ்லிம் குரல் நூலில் மௌலவி அஷ்ரப் அலி தானவியை தப்லீக் ஜமாஅத்தின் மூன்றாவது ஷெய்குமார்களில் ஒருவராக எழுதியுள்ளார். முஸ்லிம் குரலில் (பிப்ரவரி 1988) 'தேவ்பந்தீ (குழப்பவாதி)கள் முகத்திரை கிழிகிறது!' என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

அதேபோல் தப்லீக் ஜமாஅத் பற்றிய தவறான குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்ற நூலில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரிஅவர்கள் அஷ்ரப் அலி தானவி தப்லீக் ஜமாஅத்தின் தலைவர்களுள் ஒருவர் என்றும் தப்லீக் ஜமாஅத் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸின் குருமார்களில் ஒருவர் என்றும் குறிப்பிடுகிறார்.

தப்லீக் ஜமாஅத்தினர்களாலும், தேவ்பந்திகளாலும், நூரிய்யா தரீகாகாரர்களாலும் அஷ்ரப் அலி தானவி தேவ்பந்திய தலைவர்களுள் ஒருவராகவும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு அப்பாற்பட்டவராகவும் கணிக்கபட்டிருக்கிறார். ஆனால் பின்னால் வந்த சிலர் அஷ்ரப் அலி தானவியை மகானாக போற்றிக் கொண்டாடத் தலைப்பட்டனர். இதன் காரணம் என்ன? அஷ்ரப் அலி தானவியின் உண்மை சொரூபம்தான் என்ன? அதைப் பற்றி அலசி ஆராய்ந்து பார்ப்போமா! வாருங்கள்!! அஷ்ரப் அலி தானவியின் உண்மை நிலையைப் பாருங்கள்.

பிறப்பு:-

தந்தை வழி பாட்டனார் வீட்டில் இவருக்கு இட்ட பெயர் அப்துல் கனி. தாய் வழிப் பாட்டனார் வீட்டின் சார்பில் இட்ட பெயர் அஷ்ரப் அலி. இவருடைய தம்பியின் பெயர் அக்பர் அலி. ஹிஜ்ரி 1280 ரபீயுல் ஆகிர் பிறை 5ல் பிறந்தார்.
சிறு வயதில் மிகவும் செல்வ நிலையில் வளர்ந்தார். இவருடைய தந்தையார் இவரை அரபிக் கல்வி கற்கவும், இவரது தம்பியை உலகக் கல்வி கற்கவும் அனுப்பினார்கள். சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்தார். அரபிக் கிதாபுகளை தம் சொந்த ஊரிலேயே ஓதிய பின் ஹிஜ்ரி 1295ல் மேற்படிப்பிற்காக தேவ்பந்த் சென்றார்.

ஹிஜ்ரி 1301ல் பட்டம் பெற்றார். இவரின் உஸ்தாது மௌலானா முஹம்மது யஃகூப், மௌலானா மஹ்மூத் ஹஸன் தேவ்பந்தி ஆகியோர். இவருக்கு தலைப்பாகை அணிந்து பட்டம் வழங்கியவர் மௌலானா ரஷீத் அஹ்மது கங்கோஹி ஆவார்.

பைஅத்:

முதலில் இவருக்கு ஹஜ்ரத் ரஷீத் அஹ்மது கங்கோஹியிடமே பைஅத் பெற நாட்டமிருந்தது. தாம் மத்ரஸாவில் ஓதிக் கொண்டிருக்கும் போது அவரிடம் சென்று பைஅத் கேட்க அவர் கொடுக்க மறுத்து விட்டார். தம் தந்தையாருடன் ஹஜ்ஜு சென்ற போது ஹஜ்ரத் ஹாஜி இம்தாதுல்லாஹ் சாஹிப் அவர்களிடமே பைஅத் பெற்றுக் கொண்டார். ஹாஜிசாகிப் இவரை தம்முடன் ஆறுமாதம் தங்கும்படி சொன்னார்கள். ஆனால் இவர் தங்காமல் தம் தந்தையுடன் ஊர் திரும்பி விட்டார். அதன்பின்தான் இவர் கான்பூர் மத்ரஸாவில் பணியாற்றினார். பின்னர் மக்காவிற்கு சென்று கிலாபத்தும் பெற்றுக் கொண்டார்.

ஆசிரியப் பணி:

பட்டம் பெற்ற பின் கான்பூர் சென்ற இவர் அங்கே 'பைஜெ ஆம்' என்னும் மத்ரஸாவில் ஓதிக் கொடுத்தார். அங்கு இவரின் சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு மாறுபட்ட போக்கினால் மத்ரஸாவை விட்டு நீக்கினார்கள். அதன்பின் ஜாமிஉல் உலூம் என்னும் மத்ரஸாவை இவரின் ஆதரவாளர்கள் நிறுவி அங்கு பதினான்கு வருடம் வேலை செய்தார்.

மக்கள் இவரின் போலி வேஷத்தைத் தெரிந்த பின் ஹிஜ்ரி 1315 ல் கான்பூரை விட்டு சொந்த ஊரான தானாபவன் வந்தார்.

ஒருமுறை இவர் கங்கோஹ்விற்கு சென்ற போது ரஷீத் அஹ்மது கங்கோஹி கட்டிலை விட்டு இறங்கி இவருக்கு சமமாக கீழே வந்து அமர்ந்து கொண்டார். அந்தளவிற்கு இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.

இவர் தானாபவனில் கான்காஹ் இம்தாதிய்யா அஷ்ரபிய்யாவை நடத்தினார்.
இவர் சிறிய, பெரிய நூற்கள் சுமார் 666 எழுதியிருக்கிறார்கள். அதில்தான் தம்முடைய கொள்கைகளை வெளிப்படையாகக் காண்பித்திருக்கிறார்.
தேவ்பந்த்தின் கொள்கைகளை பரப்புவதற்கு மிகவும் பாடுபட்டார்.

ஸூபியிசத்தை – வஹ்தத்துல் வுஜூது கொள்கையை திருத்துவதாகக் கூறிக் கொண்டு அதற்கு மாற்றமாக பல்வேறு சித்தாந்தங்களை கொண்டு வந்து அதை வஹ்தத்துல் வுஜூது என்று பரப்பினார். இக் கொள்கை ஸூபியாக்களின் நடைமுறைக்கு முற்றிலும் மாற்றமாக இருந்தது.

தம்முடைய முரீதுகளுக்கும் தேட்டமுடையவர்களுக்கும் கடிதங்கள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், நூல்கள் மூலமாகவும் தங்கள் கொள்கைகளை பரப்பினார். அதன் அடிப்படையில் இவரது கடிதங்கள் 'அல் இம்தாது' என்ற பத்திரிகையில் வெளி வந்தது. பிஹிஸ்திஜேவர், கஸ்துஸ் ஸபீல், தஃலிமுத்தீன், ஆதாபுல் முஆஷாத் போன்ற எண்ணற்ற நூற்களில் தாம் போற்றும் தேவ்பந்திய கொள்கைகளை எழுதி பரப்பினார்.

மௌலிது, ஸலவாத்து மஜ்லிஸுகளில் இவர் கலந்து கொள்ள மாட்டார். தெரியாத நிலையில் ஒரு சபையில் கலந்து கொண்டால் சாக்கு போக்கு சொல்லிவிட்டு அதிலிருந்து வெளியேறி விடுவார்.

அஷ்ரப் அலி தானவியின் துரோகங்களும் கொள்கைகளும்:

கான்பூரில் இவர் செய்த வேலை சுன்னத் வல் ஜமாஅத்தினர் போல் நடித்து மக்களுக்கு வஹ்ஹாபியிஸத்தைப் போதித்ததுதான். அவர் கூறுவதைப் பாருங்கள்:

'அங்கு கான்பூரில் மீலாத் கூட்டங்களில் கலந்து கொண்டால் ஒழிய தங்குவது இயலாத ஒன்றெனக் கண்டேன். இனி மீலாது கூட்டங்களில் கலந்து கொள்ள சிறிது மறுத்துவிட்டோமானாலும் கூட 'வஹ்ஹாபி' என்று குறிப்பிடுவார்கள். அவ்வளவுதான்! மிகுந்த இழிவுக்கும் அவமரியாதைக்கும் நாம்(அஷ்ரப் அலி தானவி) ஆளாகிவிடுவோம்.
(மேலும் சொல்கிறார்) எவ்வகையிலும் 'மீலாத்' விழாக்களில் கலந்து கொண்டாலொழிய அங்கு (கான்பூரில்) தங்குவதென்பது நடவாத ஒன்றென்பதைக் கண்டேன். இனி அங்கு தங்குவது ஏற்றமாக தெரிந்தது. ஏனெனில், அதில் லாபமும் இருந்தது. மத்ரஸாவிலிருந்து சம்பளமும் கிடைத்துக் கொண்டிருந்து.'

 [ஆதாரம்: ஸைபே யமானி பக்கம் 23, 24. தொகுப்பு: மௌல்வி மன்ஸூர் ஸம்பலி தேவ்பந்தி]

மீலாது ஷிர்க், பித்அத், ஹராம் என்றும் தமது நூற்களில் வரிசைப்படுத்தி எழுதிவிட்டு, தமது சுயநலத்திற்காகவும், தமக்கு பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தாம் விலக்கிய கருமத்திலிருந்து தம்மை காத்துக் கொள்ள இயலாமல் அதிலே விழுந்து விட்டார்.
தம்மை – தம் கொள்கைகளை மூடி மறைத்துக் கொண்டு தம் நோக்கம் நிறைவேறுவதற்காக எவ்வித வேஷமும் போடலாம், எவ்வித இழிசெயலும் செய்யலாம் என்ற நயவஞ்சகத் தன, நரித்தன புதிய யுக்தியை இந்திய முஸ்லிம்கள் மத்தியில் கொண்டு வந்ததற்காகத்தான் அவருக்கு 'ஹகீமுல் உம்மத்' என்று அவர் ஆதரவாளர்கள் பட்டம் சூட்டினர் போலும்.

இதனால்தான் இவரின் இந்த அருமையான சித்தாந்தத்தை தப்லீக் ஜமாஅத்தை உருவாக்கிய மௌல்வி இல்யாஸ் ஏற்றுக் கொண்டு சொல்கிறார் பாருங்கள்:
ஒருமுறை மௌல்வி இல்யாஸ் கூறலானார்:-

'ஹழ்ரத் அஷ்ரப் அலி தானவி மிகப் பெரிய வேலை செய்திருக்கிறார்கள். எனது மனம் விரும்புகிறது கல்வி ஞான போதனை முறை அவர்களுடையதாகவும், அதனைப் போதிக்கும் தப்லீக் முறை என்னுடையதாகவும் இருக்க வேண்டும். ஆக இவ்வாறு அவருடைய போதனைகள் விரிவாகி விடும்.'

[நூல்: மல்பூஜாத்தே மௌல்வி இல்யாஸ் பக்கம் 47.]
 
தஸவ்வுப்:
 
வஹ்தத்துல் வுஜூது கொள்கையை போதித்து வந்த மகான்கள் அதன்படி செயல்படும் போது அது இஸ்லாத்திற்கு முரணானது, கேடானது என்று கூறி ஏன் தம்முடைய ஷெய்குடைய (ஹாஜி சாகிப் அவர்கள் வஹ்தத்துல் வுஜூது கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது) தஸவ்வுப்பும் இஸ்லாத்திற்கு முரணானதுதான் என்று கூறி, தம் கொள்கைக்கு ஒத்துவரக் கூடிய அளவில் புதிய பரிணாமத்துடன் தஸவ்வுப்பை(?) உருவாக்கினார். தேவ்பந்தின் தலைவரான மௌலவி அஷ்ரப் அலி தானவி உருவாக்கிய தஸவ்வுபை தேவ்பந்த் உலமாக்கள் தங்கள் தஸவ்வுப்பாக ஏற்றுக் கொண்டனர். அதாவது வுஜூது ஒன்று என்றும், தாத்து இரண்டு என்றும் புதிதாக எந்த ஆரிபீன்களும் கூறாத ஒன்றை வஹ்தத்துல் வுஜூது என்று கூறிக் கொண்டார்.

வஹ்தத்துல் வுஜீது சித்தாந்தத்தை பின்பற்றுவோரை காபிர் என்றும் துணிந்து கூறினார். இதைத்தான் இன்றைய இவரின் அடிவருடிகளான நூரிஷாஹ் தரீகத்தினர் பற்றிப் பிடித்துக் கொண்டனர். இதனாலேயே தமக்கு ஞானம் போதித்த தேவ்பந்த் தலைவரான அஷ்ரப் அலி தானவியை மகானாக ஒப்புக் கொண்டுள்ளனர். தேவ்பந்த் தலைவர்களில் அஷ்ரப் அலி தானவியை மட்டும் குறிப்பிட்டு சொன்னால் இவர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஏன் மற்ற தலைவர்களை குறை சொல்லும் போது கோபம் வருவதில்லை என்று பார்த்தால், அதிலும் இவர்கள் அஷ்ரப் அலி தானவியின் முறையைத் தான் பின்பற்றுகின்றனர். அதாவது தங்கள் கொள்கைகளை மறைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் என்றும் தரீகாவாதியினர் தான் என்றும் சொல்லிக் கொண்டு உள்ளத்தில் கடும் விஷமான தேவ்பந்திய கொள்கைகளை மறைத்து மக்கள் மத்தியில் விஷத்தை தூவுகின்றனர்.

பாருங்கள்! அஷ்ரப் அலி தானவியின் தஸவ்வுப் எப்படிப்பட்டது என்று அவரே விளக்குகிறார்:
 
 'தானவியிடம் இதுவரை பைஅத் செய்து கொள்ளாத ஒருவர், (பைஅத் செய்து கொள்ள வேண்டுமென்று நினைத்துள்ளார்) அவர் கனவு காண்கிறார், அஷ்ரப் அலி தானவியின் பெயரை கலிமாவில் ஓதுவதாக. அவர் தனது கடிதத்தில் தானவிக்கு எழுதுகிறார்:


Al Imdad

Al Imdad
 
 
'இப்படி ஓதுவது சரியல்ல என்பது எனக்குக் கனவிலும் புரிகிறது. ஆனால் நான் விரும்பாமலேயே எனது நாவு இதையே இரண்டு, மூன்று முறை கூறுகிறது… அப்போது தங்களை என் முன் காணுகிறேன்….இதனிடையே நான் விழித்துக் கொண்டேன். கனவிலே நடந்த தவறு பற்றி நினைவு வந்தவுடன், நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன், இந்த நினைவை மனதை விட்டுப் போக்க வேண்டுமென்று. பிறகு திரும்பிப் படுத்து நாயகத்தின் மீது 'ஸலவாத்' ஓதி, தவற்றுக்குப் பரிகாரம் காண முயலுகிறேன். ஆனால், அப்போதும் 'அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா வ மவ்லானா அஷ்ரப் அலி' என்றே என் நாவில் வருகிறது. நான் தூங்கி விடவில்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன்! ஆனால் நான் சுய இஷ்டத்தோடு இல்லை. கட்டுண்டவனாக இருக்கிறேன். நாவும் எனது இஷ்டத்தில் இல்லை!'

இக்கடிதத்திற்கு தானவி பதில்  எழுதினார்கள் 'இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு ஆறுதல் கூறப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் யாரின்பால் செல்ல நாடுகிறீர்களோ அவர் சுன்னத்தைப் பின்பற்றியவரேயாவார்' என்று.

 [ஆதாரம் -அல் இம்தாது மாசிகை ஹிஜ்ரி 1326 ஸபர் மாதம் பக்கம் 35.
-தப்லீக் ஜமாஅத் பற்றி தவறான குற்றச்சாட்டுக்களும் தக்க பதில்களும் பக் 153, 154.]

இந்த சம்பவத்தை நீங்களே யோசித்துப் பாருங்கள்! கனவில் மட்டும் அஷ்ரப் அலியின் பெயரை கலிமாவில் ஓதவில்லை. நினைவிலும் ஓதுகிறார். அதில் தான் சுய நினைவில் இல்லை என்கிறார். சுய நினைவற்ற யாராவது ஒருவர் தான் சுய நினைவில் இல்லை என்று சொன்னதுண்டா? ஒருவர் சுயநினைவற்ற நிலையில் செய்த செயலை அவர் நினைவிற்கு வந்ததும் செய்யும் போது பார்த்தவர் சொன்னால், அப்படியா? நான் அப்படிச் செய்தேனா? என்று ஆச்சரியப்பட்டுக் கேட்பார். ஆனால் இங்கு தமக்கு சுய நினைவு இல்லை என்பதை சுய நினைவில்லாத போதே கண்டு கொண்டதாகவும் ஒருவர் கூறுகிறார் என்றால் இந்த மோசடித்தனத்தை, அதாவது தான் (அஷ்ரப் அலி) நபித்துவத்தை தாவாப் பண்ணுவதை யாராவது கண்டு கொண்டால் தப்பிப்பதற்காக இந்த வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டார். ஆனால் கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்குத்தான் என்பது போல் மாட்டிக் கொண்டார்.

சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த எந்த ஒரு ஷெய்காவது சுய நினைவுடன் தன்னை நபி என்று அழைக்கச் சொன்னார்களா? அவ்வாறு அழைக்குமாறு ஊக்கப்படுத்தினார்களா? இதுதான் குப்று என்னும் சகதியில்; அஷ்ரப் அலி மாட்டிக் கொண்ட கதை! இதற்காகத்தான் மீரட் மௌலானா அவர்கள் இவரை காபிர் என்று பத்வா கொடுத்தார்கள்.

இதனால்தான் அஷ்ரப் அலி வஹ்தத்துல் வுஜூது ஞான சித்தாந்தத்தை போதிக்கும் உண்மை ஸூபியாக்களை சாடினார் போலும்! இந்த அடிப்படையில்தான் நூரிஷா தரீகாவினர் அஷ்ரப் அலியின் ஞானத்தை ஏற்றுக் கொண்டனர் போலும்.

                                                                                                             --- தொடரும்

                                                                                                   நன்றி- http://sufimanzil.org/
Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment