Wednesday 11 January 2017

இந்தியாவில் வஹாபிய பித்னாவின் ஆரம்பம் - 2

இந்திய துணிகண்டத்தில் இருந்த இஸ்லாமியரின் மூல நம்பிக்கைகள் என்ன  ?
எங்கு ,எப்பொழுது வேற்றுமை பிரிவுகள் தோன்றின ?

ஆரம்ப காலம் முதல் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை இஸ்லாமியர் ஹனபி மத்ஹபை பின்பற்றும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தினராக இருந்தனர் . இந்தியாவின் கொங்கன் பகுதியிலும் தென்னிந்தியாவின் தமிழகம் மற்றும் கேரளாவில் ஷாஃபி  மத்ஹபை பின்பற்றும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தினராக இருந்தனர் . சில பகுதிகளில் ராபிழி ஷியாக்கள் இருந்து வந்தனர் .

இந்திய முஸ்லீம் சமூகத்தில் கொள்கை சார்ந்த குழுக்களின் பிளவு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்டது. குறிப்பாக மத்ஹப் உடைய நான்கு இமாம்களை தக்லீது செய்வது கருத்து வேற்றுமைக்கான ஒரு முக்கிய காரணியாகவும் , தஸவ்வுப் என்னும் தரீகத்துடைய வழிமுறைகளும் ஒரு சிறிய  அளவிற்கு பிரிவின் இலக்காயின .


தக்லீதும் , தஸவ்வுபும் வழிகேடான பித்அத்கள் என்று எதிர்ப்பாளர்களால் சித்தரிக்கப்பட்டு ,இதன் காரணமாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான பல உட்பிரிவுகள்  உருவாயின.

இந்த உண்மைகளை வரலாற்றுரீதியான ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்வதற்கு , இரண்டு  மேற்கோள்கள் எடுத்துக்காட்டப்படுகின்றது .

முதலாவது ஹக்கீம் அப்துல் ஹை ரேபரேலி உடையது ,இன்னொன்று சுலைமான் நத்வி ,மவ்லவி ஷிப்லி நுஃமானி உடைய மாணவர் .

 [1] அப்துல் ஹை ரேபரேலி உடைய மேற்கோள் : 

சில அறிஞர்களின் கருத்துப்படி , பிக்ஹ் உடைய விஷயங்களில் ஓர் இமாமை தக்லீது செய்வது ஹராமும் ,அனுமதிக்கப்படாததும் ஆகும் . குர்ஆனிலும் ,சுன்னாஹ்விலும் தெளிவாக உள்ள தீர்ப்புகளை பின்பற்ற வேண்டும் ,மேலும் பிக்ஹ் உடைய விஷயங்களில் கியாஸ் ,இஜ்மாவுக்கு எந்த  பங்கும் இல்லை .

இவ்வகையான கொள்கைக் கோட்பாட்டை பின்பற்றிய அறிஞர்கள் , மவ்லானா பகீர் இலாஹாபாதி பின் யஹ்யா , மியான் நசீர் ஹுசைன் திஹ்லவி பின் ஜவ்வாத் அலி , நவாப் சித்திக் ஹசன் போபாலி மற்றும்  அவர்களது ஆதரவாளர்கள் .

இன்னுமொரு கூட்டம் தக்லீதைக் கொண்டு தீவிர எதிர்ப்பு  வாதங்களை முன்வைத்தது ,இன்னும் அவர்கள் அது தடை செய்யப்பட்ட ஒன்றென பிடிவாதம் செய்தனர் . அவர்கள் முகல்லீதீன்கள் ( இமாம்களைப் பின்பற்றுவோர் ) தங்களது நப்சின் அடிமைகள் என்றும்  அஹ்லுல் பிதாவைச் சார்ந்தவர்கள் என்றும் கூறினர் .

அவர்கள் தமது கருத்தில் எந்த அளவிற்கு கடுமையானவர்களாக இருந்தார்கள் என்றால் அவர்கள் மத்ஹப் உடைய நான்கு இமாம்களையும் சிறுமைப்படுத்தபவர்களாக இருந்தனர் ,அதிலும் குறிப்பாக இமாமுல் அஃலம் இமாம் அபூஹனீபா அவர்களின் மீது .

 இவ்வகையான கொள்கைக் கோட்பாட்டை பின்பற்றியவர்கள் மவ்லானா அப்துல் ஹக் பணாராசி பின் பஜ்லுல்லாஹ் மற்றும் அப்துல்லாஹ் சித்திக்கி இலாஹாபாதி , மற்றும்  அவர்களது ஆதரவாளர்கள் .

இவர்கள் தமது கொள்கையைப் பரப்ப எழுதிய நூற்கள் பின்வருமாறு ,

மவ்லவி  மொய்னுதீன் சிந்தி எழுதிய "திராசத்துள் லபீப் "
மவ்லவி பாகீர் இலாஹாபாதி எழுதிய "குர்ரதுல் ஐன் "
மவ்லவி இஸ்மாயில் திஹ்லவி எழுதிய " தன்வீருள் ஐனைன் "
மியான் நசீர் ஹுசைன் எழுதிய "மியாருள்  ஹக் "   
மவ்லவி அப்துல்லாஹ் இலாஹாபாதி எழுதிய "இஃதிசாமுஸ் ஸுன்னா "
நவாப் சித்திக் ஹசன் போபாலி எழுதிய "அல் ஜன்னாஹ் பில் உத்ஸவத்தில் ஹஸனாஹ் பிஸ் ஸுன்னாஹ் "  

ஹனபி உலமாக்களும் இருவகையினராக இருந்தார்கள் :

[i] ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் பிரகாரம் தக்லீதை ஏற்பவர்கள் . "அர்கான் ஏ அர்ப ஆ  " நூலின் ஆசிரியர் முல்லா பஹ்ருல் உலூம் மவ்லானா அப்துல் அலி பின்  முல்லா நிஜாமுத்தீன் , "அல் தலீக் அல் முமஜ்ஜத் "  நூலின் ஆசிரியர் மவ்லானா அப்துல் ஹை பிரங்கி மஹாலி பின் அப்துல் ஹலீம் .

[ii] மற்றோரு வகையான ஹனபி உலமாக்கள் தக்லீதை முழு மூச்சாகப் பின்பற்றியவர்கள் ,இன்னும் தக்லீதுக்கு எதிரான எந்த ஒரு சமரசத்தையும் ஏற்காதவர்கள் . உதாரணமாக மவ்லானா ஷைகு பஜ்லே ரஸூல் பதாயூனி , மற்றும்  அவர்களது ஆதரவாளர்கள் .
islamiuloomofunoon

[நூல்  - இஸ்லாமி உலூம் ஓ பூணூன் ஹிந்துஸ்தான் மேன் ,பக்கம் 154,தாருல் முஸன்னிபீன் ,ஆசம்கர்ஹ் ,ஹக்கீம் அப்துல் ஹை ரே பரேலி ]  

[2] சுலைமான் நத்வி உடைய மேற்கோள் 

மவ்லவி ரஷீத் அஹ்மத் கங்கோஹி மற்றும் மவ்லவி காசிம் நானோத்வி (தாருல் உலூம் தேவபந்தின் ஸ்தாபகர்  )ஆகியோர் ஷாஹ் அப்துல் கனி முஜத்திதியின் மிகச் சிறந்த மாணவர்கள் . இஸ்மாயில் திஹ்லவியின் மாணவர் மவ்லவி ஷவ்கத் அலி ஜூஅன்புரி . இவர்கள் பித்அத் எதிர்ப்பாளர்களாகவும்,தூய்மையான தவ்ஹீதை போதனை செய்வதாகவும் ,இன்னும் ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்களாகவும் தமது கூற்றினை வெளிப்படுத்தினர் .

மவ்லவி ஷாஹ் இஷாக்கின் மாணவர் மவ்லவி நசீர் ஹுசைன் திஹ்லவி . இவரும் இவரது  ஆதரவாளர்களும் பித்அத் எதிர்ப்பாளர்களாகவும்,தூய்மையான தவ்ஹீதை போதனை செய்வதாகவும் ,இன்னும் ஹனபி மத்ஹபை பின்பற்றுவதை தவிர்ப்பவர்களாகவும் தமது கூற்றினை வெளிப்படுத்தினர் .மார்க்க சட்டங்களை நேரடியாக ஹதீத் நூற்களில் இருந்து பெற்று அதன் பிரகாரம் அமல் செய்யலாம் என்று தமது கூற்றினை வெளிப்படுத்தினர் . இந்த கூட்டத்தினர் 'அஹ்லே ஹதீத் ' என்று அழைக்கப்பட்டனர் .

மூன்றாவது வகையான உலமாக்கள் தமது பழமையான பாரம்பரியங்கள் மீது உறுதியாக நிலைத்திருந்து தம்மை 'அஹ்லுஸ் ஸுன்னாஹ் ' என்றழைத்தனர் . இந்த கூடடத்தின் தலைவர்கள் யாவரும் பதாயூன் மற்றும் பரேலியைச் சார்ந்த உலமாக்களாகும் .
Hayate Shibli

[நூல் -ஹயாதே ஷிப்லி ,பக்கம் 46 ,தாருல் முஸன்னிபீன் , ஆசம்கர்ஹ் ,சுலைமான் நத்வி ]

அப்துல் ஹை ரேபரேலி மற்றும் சுலைமான் நத்வி அகியோரைப் பொறுத்தவரை ,தக்லீதின் மீது உறுதியாக நின்று ,இஸ்லாமிய பாரம்பரியத்தை பற்றிப் பிடித்த'கூட்டம் தம்மை  "அஹ்லுஸ் ஸுன்னாஹ் " என்றழைத்தனர் . இந்த உலமாக்கள் பெரும்பாலும் பதாயூன் மற்றும் பரேலியைச் சார்ந்தவர்கள். இன்றளவும் அவர்கள் தக்லீதை வீட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள் மற்றும்  இஸ்லாமிய பாரம்பரியத்தை  விட்டு அகலவும் மாட்டார்கள் .

                                                                        பிளவு 

இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அப்துர்ரஹ்மான் பர்வேஸ் இஸ்லாஹி மற்றும் பேராசிரியர் கலாநிதி முஹம்மது அய்யூப் காதிரி ஆகியோர் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்ட பிளவின் மூல ஆணிவேரை பின்வருமாறு விவரிக்கின்றனர் .

* ஹஸ்ரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்களின் மாணாக்கரில் ஒரு கூட்டம் அன்னாருடைய கொள்கையில் உறுதியாக இருந்து ஷரீயத் மாற்றமான விஷயங்களில்  எதையும் பொறுத்துக்கொள்ள இயலாதவர்களாக இருந்தனர் .இன்னொரு கூட்டம் தக்லீதை மறுக்குமாறும் ,இஜ்திகாதை ஏற்குமாறும் அறைகூவலிட்டது . இவ்வாறு மெல்ல மெல்ல எனினும் உறுதியாக இவ்விருவரிடையே சில விஷயங்களில் கொள்கை பிரிவுகள் உண்டாயின .

[நூல்- முப்தி சத்ருத்தீன் ஆஸுர்தாஹ் ,பக்கம் 138,மக்தபா ஜாமா ,அப்துர்ரஹ்மான் பர்வேஸ் இஸ்லாஹி ]

* அவாத் நகரம் மிகச் சிறந்த சிந்தனையாளர்களை உருவாக்கியது .அவர்களுள் மவ்லானா பஜ்லே ஹக் கைராபாதி அவர்கள் மிகவும் அபூர்வமானவர்கள் . தமது தந்தையார் பஜ்லே இமாம் அவர்களிடம் மட்டுமல்லாது ஷாஹ் வலியுல்லாஹ் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து அவர் கல்வி கற்றார் .

எனினும் அவர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவி மற்றும் ஷாஹ் இஷ்ஹாக் ஆகியோரின் பிழையான கொள்கைகளை எதிர்த்து தமது பாரம்பரிய இஸ்லாமிய மரபுகளின் மீது உறுதியாக நின்றார் .

மவ்லானா மஹபூப் அலி திஹ்லவி ( ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்களின் மாணாவர் ) அவர்களும் அஹ்லுஸ் ஸூன்னாஹ் கொள்கையைச் சார்ந்தவர் தான் .மவ்லானா பஜ்லே ஹக் மற்றும் மவ்லானா மஹபூப் அலி திஹ்லவி ஆகியோர் ஷாஹ் இஸ்மாயில் திஹ்லவியின் வஹாபிய கொள்கைகளை கடுமையாக எதிர்த்தனர் . இவர்களுக்கு உறுதுணையாக பரேலி ,பதாயூனைச் சார்ந்த உலமாக்கள் நின்றனர் .

[நூல்- உருது ரோஜனமா ,உருது மேன் மத்ஹபி அதப் ,பக்கம் 55, டிசம்பர் 1995 ]

 மவ்லானா தனாவுல்லாஹ் அம்ரித்சரி மற்றும் முஹம்மது ஜாபார் தாநேசரி ஆகியோரின் கருத்துக்கள் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதோடு சரியான முடிவை எத்துவதற்கு அனுகூலமாயிருக்கின்றன .

* நான் இந்தியாவில் இருந்த காலத்தில் [ஹிஜ்ரி 1280- 1864ஆம் ஆண்டு ],முழு பஞ்சாபிலும் வஹாபிய கொள்கையை பின்பற்றுவோர் பத்து நபர்கள் கூட இருக்க மாட்டார்கள் என நம்புகின்றேன் .இப்பொழுது[1302 ஹிஜ்ரி - 1884ஆம் ஆண்டு ] ஒவ்வொரு ஊரிலும் .ஒவ்வொரு நகரிலும் நான்கில் ஒரு'நபர் இஸ்மாயில் திஹ்லவியின் கொள்கையைப் பின்பற்றும் வஹாபியாக உள்ளார் .

[நூல் - தவாரிக் ஏ அஜீபா ,பக்கம் 81, சங் மெயில் பப்ளிகேஷன் , லாகூர் ,முஹம்மது ஜாபார் தாநேசரி ]

* அமிர்தசரில் முஸ்லிம் ,முஸ்லிமல்லாதோரின் எண்ணிக்கை சமமாக இருந்தது .எண்பது வருடம் முன்பு ,எல்லா இஸ்லாமியரும் இன்று 'ஹனபி பரேல்வி ' எனப்படும் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர் .

[நூல்- ஷமா தவ்ஹீத் ,பக்கம் 4,மக்தபா தானாயியா ,சர்கோதா ,பஞ்சாப் ,தனாவுல்லாஹ்  அம்ரத்சரி ]

மவ்லானா தனாவுல்லாஹ் அம்ரித்சரி 'மஜல்லா அஹ்லே ஹதீத் ' 
பத்திரிக்கையின் ஆசிரியர் 1973ல்  கூறுகின்றார் , தம்மை பொறுத்தவரை ,165 ஆண்டுகளுக்கு முன்பு ,பஞ்சாப் அம்ரித்சரின் இஸ்லாமிய சமூகம் ,இன்று 'பரேல்வி ' என்று அழைக்கப்படும் மக்களின் அதே கொள்கைகளைத் தான் கொண்டிருந்தனர் . இன்னும் முஹம்மது ஜாபர் தான்சேரியை பொறுத்தமட்டில் ,200 ஆண்டுகள் முன்பு வரை ஒருங்கிணைந்த பஞ்சாபில் வஹாபிகளின் எந்த அடையாளமும் இல்லை அல்லது இஸ்மாயில் தெஹ்லவியின் கொள்கைகளை பின்பற்றுவோரும் இல்லை  

சிராஜுல் ஹிந்த் ஹஸ்ரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்தித் திஹ்லவி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்களின் மறைவுக்கு பின் [மறைவு - 1239 ஹிஜ்ரி - 1823ஆம் ஆண்டு ]இஸ்லாமியர் பலர் ஸுன்னி ஹனபி கொள்கையில் இருந்து பிறழ்வுபட்டு கைர் முகல்லிது எனும் மத்ஹப் மறுப்பாளர்கள் ஆயினர் . இஸ்மாயில் திஹ்லவியின் நூல் 'தக்வியத்துள் ஈமான் '  அத்தகையோரின் சிந்தனைகளை சுருக்கமாகக் காட்டியது .

தேவபந்தி பிர்காவின் ஹக்கீமும் உம்மத்' (?) அஷ்ரப் அலி தானவி தனது நூலில் இந்திய வஹாபிகள் மூல கர்த்தா இஸ்மாயில் திஹ்லவி என்ன நினைத்தார் என பின்வருமாறு எழுதுகிறார் .

"நான் இந்த நூலை எழுதியுள்ளேன் ,இன்னும் இதில் சில இடங்களில் கடுமையான சொற்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதையும் அறிவேன் ,இன்னும் சில இடங்களில் தீவிரமான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதையும் அறிவேன் . உதாரணமாக சில மறைவான ஷிர்க்கை (ஷிர்க் ஏ 
காஃபி ) உண்டாக்கும் செயல்களை நான் பகிரங்கமான ஷிர்க் (ஷிர்க் ஏ ஜாலி ) என்று பெயரிட்டுள்ளேன் . இதை கொண்டு மிகப் பெரிய சீற்றம் உண்டாகும் என்று நான் பயப்படுகின்றேன் .நான் இங்கு இருந்தால் ,இந்த கருத்துக்களை  எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு பிரகடனப்படுத்தி இருப்பேன் . எனினும் இந்த நொடியில் எனது திட்டம் ஹஜ்ஜுக்கு சென்று அதன் பின் ஜிகாத் புரிய செல்வதே .எனவே ,அடுத்த எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு இந்த கொள்கை கருத்துக்களை பரப்ப இயலாது .இதை வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்பதால் இந்த நூலை ஒரே பதிப்பில் ,இதற்கு எதிராக சீற்றம் வரும் எனும் போதிலும் எல்லாவற்றையும் பதிப்பிக்க முடிவு செய்தேன் . எனினும் இது சில காலங்களில் தணிந்துவிடும் என்று நம்புகின்றேன் "

Hikayath E Aulia

[நூல்- ஹிகாயத் ஏ அவ்லியா (அர்வாஹ் ஏ தலாதா ),பக்கம்'98,குதுப் கானா நயீமியா ,தேவ்பந்த் ,அஷ்ரப் அலி தான்வி  ]

கடுமையான சொற்கள் ஒரு எழுத்தாளனின் பழக்கமாக இருக்கலாம் . எனினும் இஸ்மாயில் திஹ்லவிக்கு ஷிர்க் ஏ காஃபி யை ஷிர்க் ஏ ஜாலி என்று பெயரிடுவதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது . 

சீற்றத்தை உண்டாக்கும் அவரது நோக்கம் நிறைவேறியது ,எனினும் பிளவுபட்ட இந்த இந்திய இஸ்லாமிய சமூகத்தின் இரணம் இன்னும் ஆறவில்லை . இதை எதுவுமே அறியாத நவீன கால தப்லீக் ஜமாத் தேவ்பந்திகள்  நாங்கள்தான்  சமூக ஒற்றுமைகாக உழைப்பவர்கள் என்பது சாத்தான் வேதம் ஓதுவது போலாகும் .


Related Posts Plugin for WordPress, Blogger...

No comments :

Post a Comment